எஸ்.தரைக்குடியில் வடமாடு எருது கட்டு நடத்த எதிர்ப்பு
சாயல்குடி : சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் உமயநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 500 குடும்பங்களை ஒதுக்கி வைத்து விட்டு சிலர் அரசு அனுமதி இன்றி வடமாடு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆக.28ல் புகார் அளித்தனர். சாயல்குடி போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணசாமி, முத்துக்குமார், பெருமாள், பெத்தராஜ் கூறியதாவது:பழமை வாய்ந்த எஸ்.தரைக்குடி உமயநாயகி அம்மன் கோயில் 9 சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிர்வாகத்தில் உள்ளது. சுழற்சி முறையில் அறங்காவலர் குழு தலைவர் பதவி வழங்கப்படுகிறது. இவ்வாண்டு இந்த நடைமுறையை மாற்றி சிலர் தன்னிச்சையாக 500 குடும்பங்களை ஒதுக்கி வைத்து விட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் கோயில் விழா வடமாடு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்கின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். ஒதுக்கி வைத்த சமூக மக்களை ஒன்று சேர்த்து வரி வாங்க வேண்டும்.சுழற்சி முறையில் அறங்காவலர் குழு தலைவர் பதவி வழங்க வேண்டும். கலெக்டரின் முறையான அனுமதி இன்றி வடமாடு எருது கட்டு நடத்தக்கூடாது. இதனை வலியுறுத்தி செப்.16 முதல் 250 குடும்பங்களுடன் கோயில் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.