| ADDED : மே 04, 2024 01:47 AM
ராமநாதபுரம்:கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கும்பகோணம், திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மண்டலங்கள் செயல்படுகின்றன. நிர்வாக இயக்குனராக மகேந்திரகுமார் உள்ளார். தேர்தல் காலத்தில் இவர் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அந்த அனைத்து உத்தரவுகளையும் திரும்ப பெற வேண்டும். மாற்றுப்பணி பார்த்து வந்த உடல் நலம் பாதித்த தொழிலாளர்களுக்கு மீண்டும் அதே இடத்தில் பணி வழங்க வேண்டும். கோடை காலத்தின் பாதிப்பு அதிகரித்து இருக்கும் நிலையில் ஆப் ஷிப்டில் இயங்கிய பஸ்களை முழு ஷிப்டாக மாற்றக் கூடாது. சிக்கனம் என்ற பெயரில் கழகத்தை சீரழிக்கக் கூடாது. ஈட்டிய விடுப்புகளை தொழிலாளர்கள் விருப்பமின்றி கழிக்கக் கூடாது. அன் பிட் ஆன தொழிலாளர்களுக்கு பணி வழங்காமல் குடும்பங்களை கஷ்டப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 14ல் கும்பகோணம் தலைமை அலுவலகம் முன், போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.