| ADDED : ஜூலை 18, 2024 08:24 PM
ராமேஸ்வரம்:-சூறாவளியால் தனுஷ்கோடியில் மணல் புயல் வீசுவதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர்.தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து சில நாட்களாக தனுஷ்கோடி, ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசுகிறது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன் தென் கடலான மன்னார் வளைகுடாவில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுகிறது.இந்நிலையில் தனுஷ்கோடியில் சூறாவளியால் கடலோரத்தில் குவிந்துள்ள மணல் காற்றோடு கலந்து மணல் புயலாக வீசுகிறது. தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மணல் மூடியுள்ளது. டூவீலர், ஆட்டோவில் தனுஷ்கோடி செல்லும் சுற்றுலாப் பயணிகள் மீது மணல் விழுவதால் அவதிப்படுகின்றனர். இச்சூழலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் ஜூலை 16 முதல் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் பகுதியில் 1500 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டதால் மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.