| ADDED : ஏப் 30, 2024 10:37 PM
ராமநாதபுரம், - பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி உட்பட 5 பேர் மீதான வழக்கு விசாரணை மே 5க்கு தள்ளி வைக்கப்பட்டது. பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி 3 வது வார்டு கவுன்சிலரும் அ.தி.மு.க., முன்னாள் நகர அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜாமுகமது, புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த வழக்கில் சிகாமணிக்கு ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. சிகாமணி ஜாமினை ரத்து செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் கீதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி இளங்கோவன் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சிகாமணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியுள்ளது. மாணவி பலாத்கார வழக்கு நேற்று பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சாந்தி மே 5க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.