இலங்கையில் நடுக்கடலில் படகு மூழ்கி தத்தளித்த 14 பேர் மீட்பு
ராமநாதபுரம்: இலங்கையில் நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய படகு நடுக்கடலில் இயந்திர பழுது காரணமாக மூழ்கியது. அதனால் கடலில் விழுந்து தத்தளித்த 14 பேரை அங்கு மற்றொரு படகில் வந்தவர்கள் மீட்டனர்.இலங்கையில் உள்ள நெடுந்தீவு பகுதியை சுற்றிப்பார்க்க தென் இலங்கையை சேர்ந்த 12 பயணிகள், 2 பணியாளர்கள் தனியார் படகில் குறிகாட்டுவானை துறைமுகத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் நெடுந்தீவில் இருந்து அவர்களை ஏற்றிக்கொண்டு வந்த படகுகின் இயந்திரம் நடுக்கடலில் பழுதானதால் மூழ்க தொடங்கியது.அதனால் கடலில் தத்தளித்தவர்கள் அங்கு வந்து கொண்டிருந்த சபரீஷ் என்ற படகிற்கு வெள்ளை கொடி காட்டி அழைத்தனர். உடனடியாக அப்படகிலிருந்த பணியாளர்கள் தத்தளித்த 12 சுற்றுலா பயணிகளையும், 2 பணியாளர்களை ஒரு சில நிமிடங்களில் காப்பாற்றி இலங்கை கடற்படைக்கு தெரிவித்தனர். பின்னர் கடற்படை படகில் கொண்டுவரப்பட்டு குறிகாட்டுவான் துறைமுகத்தில் இறக்கிவிட்டனர்.