பரமக்குடியில் 4 ஆண்டுகளில் 5447 விதை மாதிரிகள் ஆய்வு 470 தரமற்ற விதைகள் கண்டறியப்பட்டது
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடி விதை பரிசோதனை நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 5447 விதை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 470 தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் விதைகளை பரிசோதிக்க வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் விதை சான்று மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறை பரமக்குடியில் செயல்படுகிறது. பரமக்குடி ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை கூட வளாகத்தில் நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் அனைத்து வகை பயிர்களின் விதைகளும் பரிசோதிக்கப்படுகிறது. விவசாயிகள் எடுத்து வரும் நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, பருத்தி, எள், காய்கறி மற்றும் கீரை என அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு சான்றளிக்கப்படுகிறது. இதன்படி விதையின் தரத்தை தீர்மானிக்கும் காரணிகளாக முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்துாய்மை, பிற ரக கலப்பு என சோதிக்கப்பட்டு முடிவுகள் வழங்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 5447 விதை மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 470 விதைகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் விதைத்து அறுவடை வரை காத்திருக்காமல் அவர்களது உழைப்பு வீணாகாமல் தடுக்கப்பட்டுள்ளது.இங்கு விதைகளுக்கு ரூ.80 கட்டணமாக செலுத்தி விதையின் தரத்தை உறுதி செய்து அதிக மகசூல் பெற விவசாயிகள் அணுகலாம் என வேளாண் அலுவலர் முருகேஸ்வரி தெரிவித்தார்.