இலங்கைக்கு கடத்த முயன்ற 600 லி., பெட்ரோல் பறிமுதல் : 3 பேர் கைது
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 600 லி., பெட்ரோலை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.மண்டபம் கடற்கரையில் இருந்து பைபர் கிளாஸ் படகில் பெட்ரோல் கடத்திச் செல்வதாக இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் வந்தது. அதன்படி இந்திய வீரர்கள் மன்னார் வளைகுடா தீவுகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது முயல் தீவு அருகே சந்தேகத்திற்கிடமான பைபர் கிளாஸ் படகை இந்திய வீரர்கள் மடக்கி சோதனையிட்டனர்.அதில் 12 கேன்களில் 600 லி., பெட்ரோல் இருந்தது. இதை இலங்கைக்கு கடத்திச் சென்று நடுக்கடலில் காத்திருக்கும் இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 60 ஆயிரம். இந்த பெட்ரோலையும், படகில் இருந்த மண்டபத்தை சேர்ந்த கடத்தல்காரர்கள் 3 பேரையும் கைது செய்து மண்டபம் சுங்கத்துறையிடம் இந்திய வீரர்கள் ஒப்படைத்தனர்.இக்கடத்தலில் மேலும் தொடர்புடையவர்கள் யார் என கடத்தல்காரர்களிடம் சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.---