உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெயரளவில் நடவடிக்கை : ராமநாதபுரத்தில் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பு

பெயரளவில் நடவடிக்கை : ராமநாதபுரத்தில் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பு

ராமநாதபுரம்: அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், கப், கவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் தாராளமாக புழக்கத்தில் உள்ளன. இவ்விஷயத்தில் அதிகாரிகளின் நடவடிக்கை பெயரளவில் உள்ளதால் மண் வளத்திற்கு கேடு விளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பைகள், கப், கவர்கள் புழக்கம் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. சிறு ஓட்டல்கள், கடைகள், மார்க்கெட், பஜார், இறைச்சி கடை ஆகிய இடங்களில் பாலிதீன் தாராளமாக பயன்படுத்துகின்றனர்.இவ்விஷயத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களின் நடவடிக்கை பெயரளவில் மட்டுமே உள்ளது. குப்பை கொட்டும் இடங்கள், தொட்டிகளில் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கிறது. சில ஊராட்சிகளில் குப்பையை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் நீர்நிலைகள், ஓடை வாய்க்கால்களில் பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளதால் அவற்றை அகற்ற வேண்டும். குறிப்பாக சில ஓட்டல்களில் சூடான உணவு, குழம்பு, காய்கறிகளை பார்சல் வழங்க வண்ணம் பூசிய பேப்பர்கள், பாலிதீன் பைகளை பயன்படுத்துகின்றனர். இந்த உணவை சாப்பிடுவோருக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்ற உணவகம், கடைககளை கண்டறிந்து மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.---------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !