அவசர சிகிச்சை பிரிவில் இரு தரப்பினர் தாக்குதல்
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் பாதுகாப்பற்ற நிலை இருப்பதால் தகராறில் காயமடைந்துசிகிச்சை பெற வந்த இருதரப்பினரும் அவசர வார்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கினர். இதனால் மற்றநோயாளிகள் அச்சத்தில் தவித்தனர்.நேற்று முன் தினம் (மே 23) இரவில் இளஞ்செம்பூர் பகுதியில் இரு கோஷ்டிகளிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் அவசர சிகிச்சை வார்டுக்குள் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அச்சத்தில் அலறினர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தாலும் அங்கு ஒரு பெண் போலீஸ் மட்டுமே பணியில் இருக்கிறார். இதனால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். உடன் வரும் அனைவரையும் அவசர சிகிச்சை வார்டுக்குள் டாக்டர்கள் அனுமதிக்கின்றனர். அரசு மருத்துவமனை பணியாளர்களும் பார்வையாளர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவனை அவசர சிகிச்சை பிரிவில் இது போன்ற தகராறு தொடர்ந்து நடந்து வருவதால் நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் இணைந்துபாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்.