| ADDED : செப் 10, 2025 03:13 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயிலில் நீராட, தரிசனத்திற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் ரூ.30 ஆயிரம் வசூலித்ததாக ஆடியோ பரவுகிறது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் 22 தீர்த்தங்களில் நீராட ஒரு நபருக்கு ரூ.25ம், கோயிலில் ருத்ர அபிஷேகம் ரூ.3500, சுவாமி தரிசனத்திற்கு ரூ.100, ரூ. 200ஐ கட்டணமாக கோயில் நிர்வாகம் வசூலிக்கிறது. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய தம்பதி இருவர் சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க மதுரையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். அந்த டிராவல்ஸ் ஏஜன்ட் அறிமுகப்படுத்திய ராமேஸ்வரத்தை சேர்ந்த வெளிநபர்கள் இருவர் இந்த தம்பதியினரை கோயிலில் புனித நீராட செய்து, ருத்ர அபிஷேகம் மற்றும் சிறப்பு தரிசனம் செய்து வைத்தனர். இதற்கு கட்டணமாக ரூ. 30 ஆயிரத்தை கேட்டு வாங்கியுள்ளனர். இதனால் வேதனையடைந்த தம்பதியினர், இந்திய துாதரக அதிகாரி மற்றும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தில் ஆன்லைனில் புகார் செய்து ஆஸ்திரேலியா சென்றனர். இதையடுத்து மத்திய சுற்றுலா அமைச்சகம் உத்தரவுப்படி மதுரை டிராவல்ஸ் நிறுவனத்தின் வெப்சைட்டை லாக் செய்தனர். பாதிக்கப்பட்ட டிராவல்ஸ் நிர்வாகி, இச்சம்பவம் குறித்து உருக்கமாகவும், ராமேஸ்வரத்தில் பக்தர்களிடம் பணம் பறித்து ஏமாற்றுவதாகவும் ஆடியோ வெளியிட்டார். இது வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து மதுரை, ராமேஸ்வரம் கோயிலில் மத்திய அரசு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.