மழையின்றி பறவைகள் சரணாலயங்கள் வெறிச்சோடியது: சீசன் துவங்கியும் கண்மாய்களில் நீரில்லை
ராமநாதபுரம்: போதிய மழையின்றி சரணாலயங்களில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால் சீசன் துவங்கியும் வெளியூர்களில் இருந்து வலசை வரும் பறவைகள் குறைந்துள்ளன.ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரகோட்டை ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.இவ்விடங்களுக்கு ஆண்டு தோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன.குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை போன்றவை இனப்பெருக்கம் செய்ய அக்டோபரில் வந்து மார்ச் வரை தங்கி அதன் பின் இடம்பெயர்கின்றன. இவ்வாண்டு ராமநாதபுரம், பரமக்குடியில் மழை குறிப்பிடும் படியாக பெய்யவில்லை.இதனால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் குறைந்துள்ளது. சீசன் துவங்கியும் வலசை வரும் பறவைகள் கூட்டம் அதிகமாக வரவில்லை.இது பறவைகள் ஆர்வலர்கள், அப்பகுதி விவசாயிகள், மக்களை கவலை அடையச் செய்துள்ளது.இதுகுறித்து தேர்த்தங்கல் வேலு கூறுகையில் '' அக்டோபர் சீசனில் சரணாலயத்திற்கு ஏராளமான பறவைகள் வரும். இதை பார்ப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். பறவைகள் இம்முறை குறைவாக வந்துள்ளன. அவற்றின் பாதுகாப்பு கருதி பல ஆண்டுகளாக எங்கள் ஊரில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது இல்லை'' என்றார்