ராமநாதபுரத்தில் துவங்கியது புத்தகத் திருவிழா நிறைய வாங்கி வாசிக்க கலெக்டர் அறிவுரை
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் புத்தகதிருவிழா நேற்று துவங்கி மார்ச் 30 வரை நடக்கிறது. பெரியோர்கள், மாணவர்கள் நிறைய புத்தகங்களை வாங்கி வாசித்து அறிவு, திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வலியுறுத்தினார்.ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மார்ச் 21 முதல் 30 வரை 7 வது புத்தகத் திருவிழா நடத்துகின்றனர்.நேற்று துவக்க விழா நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து அரங்குகளை திறந்து வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். கலெக்டர் பேசியதாவது: இது போன்ற விழாக்களின் வாயிலாக பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் கிடைக்கிறது. மாணவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்க வேண்டும். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே புத்தக திருவிழாவின் நோக்கம் என்றார்.முன்னதாக சிறந்த வாசகம் எழுதும் போட்டியில் வென்றவர்கள், நிகழ்ச்சியில் பரதநாட்டியம், வீணை வாசித்தவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், முதன்மை கல்வி அலுவலர் சின்னராஜு, மாவட்ட நுாலகர் பாலசரஸ்வதி, ராமநாதபுரம் கலை இலக்கிய ஆர்வலர் சங்கத் தலைவர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, மாவட்டச் செயலாளர் வான்தமிழ் இளம்பரிதி, நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவின் தங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.