காடமங்கலத்தில் மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
பெருநாழி; பெருநாழி அருகே காடமங்கலம் காளியம்மன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெருநாழி அருகே உள்ள காடமங்கலத்தில் காளியம்மன் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று பெருநாழி - அருப்புக்கோட்டை சாலையில் சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என இருபிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பந்தய துாரம் போக வர 12 கி.மீ., நிர்ணயிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 14 மாட்டு வண்டி பந்தய வீரர்களும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் 13 மாட்டு வண்டி பந்தய வீரர்கள் பங்கேற்றனர். சீறி பாய்ந்த காளைகளை சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான கிராம மக்கள் கண்டு ரசித்தனர். முதல் நான்கு இடங்களை வெற்றி பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பணம், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை காடமங்கலம் கிராம மக்கள் செய்தனர்.