பயணிகளை பயமுறுத்தும் பஸ்; விபத்து நடந்தால் யார் பொறுப்பு
பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு டவுன் பஸ் ஓட்டை உடைசலாக இயக்கப்படுவதால் விபத்து ஏற்படும் சூழலில் யார் பொறுப்பு ஏற்பது என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து 35க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. சில ஆண்டுகளாக ஏராளமான டவுன் பஸ்கள் பழுதாகிய நிலையில் இயக்கப்பட்டன. இதனால் அடிக்கடி பிரேக் டவுன் ஆகி மக்கள் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நயினார்கோவில், போகலுார், பரமக்குடி ஒன்றிய பகுதிகளுக்கு புதிய டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒரு சில டவுன் பஸ்களுக்கு மாற்றாக வழங்கப்பட்ட புதிய பஸ்கள் அதே வழித்தடத்தில் இயக்கப்படாமல் மாற்று ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. பரமக்குடியில் இருந்து பார்த்திபனுார், இடையாத்துார் செல்லும் 37ம் எண் டவுன் பஸ்சின் கூரை பெயர்ந்து மழை பெய்யும் நேரங்களில் ஒட்டுமொத்தமாக தண்ணீர் உள்ளே விழுகிறது. பயணிகள் அமரும் இருக்கைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. பல இருக்கைகள் அமர முடியாமல் சீட்கள் தனித்தனியே கழன்று விழுகின்றன. பஸ்சில் உள்ள எண்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு ஒரே ஒரு போர்டு மட்டும் முன்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. அதனையும் பயணிகள் பார்க்க முடியாத வகையில் சாய்ந்து உள்ளது. டவுன் பஸ்களில் கிராம மக்கள் விளைபொருட்கள், மற்றும் அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருட்களையும் கொண்டு செல்வது வழக்கம். மேலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் டவுன் பஸ்களை மட்டுமே நம்பி பயணிக்கின்றனர். ஆகவே இதுபோன்ற கண்டமாகிய பஸ்கள் விபத்துக்குள்ளாகும் முன் மாற்று ஏற்பாடுகளை செய்ய போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.