ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டிற்கு இரவில் வராத பஸ்கள்
ஆர்.எஸ்.மங்கலம்: இரவு நேரங்களில் ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் செல்வதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக ஆர்.எஸ்.மங்கலம் இருப்பதால் இங்கு சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் செல்லும் வகையில் பஸ் போக்குவது அதிகளவில் உள்ளது. இதனால் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் நிலை உள்ளது. திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை கைகாட்டி விலக்கில் இருந்து 1.5 கி.மீ.,ல் ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில் பஸ்ஸ்டாண்ட் பகுதிக்கு பஸ்கள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் பயணிகளை இறக்கி விடும் நிலை உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பெண் பயணிகளும், வயதானவர்களும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் வழித்தடம் இருந்தும் பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் பஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.