அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்க அழைப்பு
ராமநாதபுரம்; -பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அவர்களது 18 வயது வரை 'அன்புகரங்கள்' நிதி ஆதரவு திட்டத்தில் மாதந்தோறும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களில் தங்கள் பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருவதை அறிந்து அக்குழந்தைகளை தொடர்ந்து அரவணைத்து பாதுகாத்திடும் பொருட்டு அவர்களது பள்ளி படிப்பு வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர 18 வயது வரை மாதம் ரூ.2000 உதவித்தொகையாக வழங்கப்படும். பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லுாரி கல்வி, உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இத்திட்டத்தில் பயன் பெற கீழ்கண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதரவற்ற குழந்தைகள்(பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்), கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோர் ஒருவர் இறந்து மற்றவர் குழந்தையை கைவிட்டு சென்று இருப்பின்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோர் ஒருவர் இறந்து, மற்றவர் மாற்றுத்திறன் கொண்டவராக இருந்தால்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோர் ஒருவர் இறந்து மற்றொருவர் சிறையில் இருப்பின்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோர் ஒருவர் இறந்து மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பின்) இது போன்ற பாதிப்புகளை உடைய குழந்தைகள் அன்புகரங்கள்' நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற அந்தந்த மாவட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், கலெக்டர், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்பவர்கள் ரேஷன் கார்டு நகல், குழந்தையின் ஆதார் அட்டை நகல், குழந்தையின் வயது சான்று நகல்( பிறப்பு சான்றிதழ், கல்வி மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்), தாய் தந்தை இறப்பு சான்றிதழ், குழந்தையின் வங்கி கணக்கு நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.