இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கு ஆக.12 க்கு தள்ளிவைப்பு
ராமநாதபுரம் : போதைப்பொருள் திருடிய வழக்கில் தலைமறைவாகி தமிழகம் தப்பி வந்த இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கை ஆக.,12க்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கை கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியில் உள்ள மரக்கடையில் இருந்து 2020-ல் இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இதில் அனுர குமார என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர் இலங்கை துறைமுக போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவின் 32, அண்ணன். பிரதீப் குமார் பண்டாரா இலங்கை துறைமுக காவல் நிலையத்தில் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருளை திருடி தனது சகோதரர் மூலம் கொடுத்திருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகித்தனர். இதனால் பிரதீப் குமார் பண்டாராவை அந்நாட்டு போலீசார் விசாரிக்க முடிவு செய்தனர். இதை அறிந்த அவர் தமிழகத்திற்கு தப்பி வந்தார். அவரை மண்டபம் கடலோர காவல்படை போலீசார் கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சிறையில் இருந்த பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் வழக்கானது ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மாவட்ட அரசு தலைமை வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார். சாட்சிகளிடம் விசாரணை நடத்திய நீதிபதி மெகபூப் அலிகான் வழக்கு விசாரணையை ஆக.,12க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.