பசும்பொன்னில் இன்று தேவர் ஜெயந்தி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார் * 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவையொட்டி முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்., 30) காலை 9:00 மணிக்கு மரியாதை செலுத்துகிறார். பாதுகாப்பு பணியில் பத்தாயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் இன்று அரசு விழாவாக 117 வது ஜெயந்தி, 62வது குரு பூஜை விழா நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக மதுரையில் கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் முதல்வர் பின் காரில் பசும்பொன் வருகிறார். பார்த்திபனுாரில் தி.மு.க.,வினர் வரவேற்பு அளிக்கின்றனர். காலை 9:00 மணிக்கு மேல் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.அ.தி.மு.க., சார்பில் பொதுச்செயலாளர் பழனிசாமி, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பா.ஜ., -காங்.,- அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சியினர், சமூக அமைப்பினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா கூறுகையில் ''10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பசும்பொன்னில் ஆளில்லா விமானம், 19 ட்ரோன் கேமராக்கள், 90 இடங்களில் அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போலீசாரால் அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும் என்றார். டி.ஐ.ஜி., அபிநவ்குமார், எஸ்.பி., சந்தீஷ் உடனிருந்தனர்.