பனை மரங்களை வெட்ட கலெக்டர்அனுமதி கட்டாயம்: அரசு புது உத்தரவு
ராமநாதபுரம்:பனை மரங்களை வேரோடு வெட்டி விற்பது, செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் அவற்றை வெட்ட வேண்டும் எனில் கலெக்டரிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மாநில மரமான பனை வெட்டப்படுவதை தடுக்கும் வகையில் கலெக்டர்தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்து ,பனை மரங்களை வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் அவற்றை வெட்டுவதற்கு கலெக்டரிடம் அனுமதி பெறுவது கட்டாயம். இதை அமல்படுத்தும் விதமாக கலெக்டர்,வருவாய் கோட்ட அலுவலர், சப் கலெக்டர்,வேளாண் உதவி இயக்குநர், காதி கிராமத்தொழில் வாரியத்தின் உதவி இயக்குநர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்படும். கலெக்டர் வேறு நபர்களை உறுப்பினராக தேவைக்கேற்பசேர்த்துக் கொள்ளலாம். ஒரு பனைமரம் 15 மீட்டர் உயரத்தை அடைய 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். முதிர்ச்சி அடைந்த பிறகுதான் ஆண், பெண் என பிரித்தறிய முடியும். அனைத்து பாகங்களும் பயன் தரும் பனைமரத்தின் முக்கியத்துவதை கருத்தில் கொண்டு அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் போன்றவைகளுக்காக வெட்டுவதை தடுக்க வேண்டும். மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைத்து,அதனை செயல்படுத்த அங்கீகாரம் அளிக்கவும், வெட்டிய ஒரு மரத்திற்கு ஈடாக 10 பனை மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.