மீனவரை மீட்ட மரைன் போலீசாருக்கு பாராட்டு
தொண்டி : தொண்டி கடற்கரையில் பிரதமரின் தானிய வள வேளாண்மை திட்டம் நிகழ்ச்சி நடந்தது. தொண்டி மீன்வளத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத் தலைமை வகித்தார். மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இத் திட்டம் குறித்து பிரதமர் மோடியின் பேச்சு நேரடியாக காட்சிப்படுத்தப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்படும் என்று மீன்வளத்துறை அலுவலர்கள் பேசினர். அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு நம்புதாளை மீனவர் படகில் இருந்து தவறி விழுந்து 8 மணி நேரம் கடலில் தத்தளித்தார். அவரை மீனவர்கள் மீட்டு மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர். கியூ பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிறப்பாக பணியாற்றிய இளையராஜாவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் நம்புதாளை கூட்டுறவு சங்கத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சத்தியேந்திரனுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.