பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காங்., கவுன்சிலர்கள் டூவீலரில் பயணம்
ராமநாதபுரம்: நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் நுாருல் இமூ, அப்சினா ஆகியோர் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி டூவீலரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரத்திற்கு நேற்று வந்த அவர்களை காங்., நகராட்சி கவுன்சிலர் மணிகண்டன் வரவேற்றார். சுற்றுப்பயணம் குறித்து நுாருல் இமூ, அப்சினா கூறியதாவது: நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தை மீட்டெடுப்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டூவீலரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் டிச.21ல் தொடங்கி கோவை, மதுரை, தேனி, திருநெல்வேலி, துாத்துக்குடி வழியாக 9 நாட்களில் 12 மாவட்டங்களுக்கு சென்றுள்ளோம். தற்போது ராமநாதபுரம் வந்தடைந்துள்ளோம். தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்று மாவட்ட தலைவர்களையும் இறுதியாக சென்னை சென்று காங்., மாநில தலைவரையும் சந்திக்கவுள்ளோம் என்றனர்.