மின்னல் தாக்கி கட்டட தொழிலாளி பலி; மரத்தடியில் நிற்க வேண்டாம்
பரமக்குடி; பரமக்குடி அருகே பார்த்திபனுாரில் மின்னல் தாக்கி கட்டடத் தொழிலாளி பலியானார். பார்த்திபனுார் காமாட்சி நகரை சேர்ந்த சித்திரைவேல் மகன் ரமேஷ் 35. இவர் கம்பி கட்டும் பணி செய்தார். நேற்று மாலை 5:00 மணிக்கு மேலப் பெருங்கரை பகுதியில் வேலைக்கு சென்ற போது மழை பெய்ததால் நாடக மேடை அருகில் உள்ள புளிய மரத்தின் அடியில் நின்றிருந்தார். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார். இவருக்கு மனைவி மலர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பார்த்திபனுார் போலீசார் விசாரிக்கின்றனர். தொடர்ந்து மழை பெய்யும் நேரங்களில் மரத்தடியில் நிற்பவர்கள் மின்னல் தாக்கி இறக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் மரத்தடியில் நிற்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.