கீழக்கரையில் சாலையில் விழுந்த மரத்தை அகற்றிய கவுன்சிலர்கள்
கீழக்கரை: கீழக்கரையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ரோட்டில் முறிந்து விழுந்த மரத்தை நகராட்சி கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் அகற்றினர். கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலகம் அருகே சொந்தக் கருணை அப்பா பள்ளிவாசல் செல்லும் சாலையில் பெரிய வேப்பமரம் முறிந்து சாலையின் நடுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பாதிப்பும் ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா மற்றும் கீழக்கரை வார்டு கவுன்சிலர்கள் முகம்மது ஹாஜா சுஐபு, மீரான் அலி, முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது, சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து மரம் அறுக்கும் இயந்திரத்தின் மூலம் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மரக்கிளையை வெட்டி அகற்றினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவு நேரத்தில் மரம் வெட்டும் பணியாளர்கள் மற்றும் துாய்மைப் பணியாளர்கள் விடுமுறையில் இருந்ததால் தாங்களாகவே களமிறங்கி மரத்தை அகற்றினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தொடர்ந்தது.