சேதமடைந்த இரும்பு பிளேட் புதுப்பிப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் சேதமடைந்த இரும்பு பிளேட்டை ஊழியர்கள் சீரமைத்து புதுப்பித்தனர். பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் நடுவில் உள்ள பிங்கர் ஜாயிண்ட் எனும் இரும்பு பிளேட் சேதமடைந்து இதனுள் பொருத்தியுள்ள இரும்பு போல்டுகள் வெளியில் நீண்டபடி இருந்தன. இதனை சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் வாகனங்கள் சிக்கி சுற்றுலாப் பயணிகளுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் இருந்தது. இதையடுத்து நேற்று தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள், ஊழியர்கள் சேதமடைந்த இரும்பு பிளேட்டை அகற்றி ரசாயனம் கலந்த சிமென்ட் கலவையை கொட்டி மீண்டும் பிளேட்டை பொருத்தி சரிசெய்து புதுப்பித்தனர். ஆனால் சில மாதங்களுக்கு பின் இரும்பு பிளேட் மீண்டும் சேதமடைந்து விடுவதால் நிரந்தர தீர்வு காண தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.