ராமாயண சொற்பொழிவுக்காக ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ராமாயணம், பகவத் கீதை சொற்பொழிவு நடத்த வட மாநில பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். மார்கழி மாதத்தையொட்டி டிசம்பர், ஜனவரியில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை சுற்றி தனியார் மகால், தங்கும் விடுதிகளில் வட மாநில பக்தர்கள் குழுக்களாக ராமாயணம், மகாபாரதம் சொற்பொழிவு நடத்துவர். அதன்படி இந்த ஆண்டு டிச., 15 முதல் ஜன.,10 வரை ஆன்மிக சொற்பொழிவு நடக்க உள்ளது. இதற்காக ராமேஸ்வரத்தில் 60 சதவீதம் தங்கும் விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்துள்ளனர். சொற்பொழிவு துவங்க இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் நேற்று குஜராத், உ.பி., ராஜஸ்தான், ஹரியானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல வட மாநிலங்களில் இருந்து ஏராள மானோர் ராமேஸ்வரத்திற்கு வந்தனர். டிச.,15க்கு பிறகு இம்மாநில பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல் மற்றும் கோயில் நான்கு வீதி சாலை வரை இவர்களின் நடமாட்டம் அதிகரிக்கும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட எஸ்.பி.,சந்தீஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.