புதிய ரேஷன்கார்டு கேட்டு குவியும் விண்ணப்பங்கள் : கள ஆய்வு தீவிரம்
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் ரேஷன் கார்டு கேட்டு தினமும் ஏராளமானோர் விண்ணப்பிக்கின்றனர். கள ஆய்விற்கு பின் வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.பெரும்பாலான குடும்பங்களில் ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற்ற சில மாதங்களில் ரேஷன் கார்டுகளில் பெயரை நீக்கி புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்து விடுவர்.ரேஷன் கார்டு தனியாக இருக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தாலும், தற்போது அரசால் அறிவிக்கப்படும் நல உதவிகளை பெற வசதியாக இருக்கும் என்பதால் புதிய கார்டு கேட்பது தொடர்கிறது.ரேஷன் கார்டு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் நாள் தோறும் அலுவலகங்களுக்கு சென்று கார்டு வந்துவிட்டதா என்று தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இது குறித்து விண்ணப்பதாரர்கள் கூறியதாவது:புதிய கார்டு இல்லாததால் எந்த பணிகளுக்கும் விண்ணப்பிக்கவும், முக்கிய தேவைகளுக்கு ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கொடுக்க முடியவில்லை.இலவச அரிசி மற்றும் சலுகை விலையில் சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்கவும் முடியவில்லை.ஏற்கனவே பெற்றோர் கார்டுகளில் இருந்து நீக்கம் செய்த பிறகே புதிய கார்டுக்கு விண்ணப்பித்தோம். தற்போது பெயர்களை நீக்கிவிட்டதால் எங்களது பெயர்கள் எதிலும் இல்லாத நிலை உள்ளது. ஆகவே சீக்கிரமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.சிவில் சப்ளை அலுவலர்கள் கூறுகையில், விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இப் பணிகள் முடிந்தவுடன் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்படும் என்றனர்.