கடலில் அதிக வெளிச்சத்தில் மீன்பிடிப்பு: லைட்கள் பறிமுதல்
தொண்டி; தேவிபட்டினம் கடலில் அதிக வெளிச்சத்தில் மீன்பிடித்ததால் லைட்கள், ஜெனரேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெனரேட்டர் வசதியுடன் ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் கம்பங்களில் அதிக வெளிச்சமுள்ள பல்புகளை கட்டி வெளிச்சத்தை காட்டுகின்றனர். முரல், நண்டு, கணவாய் உள்ளிட்ட பல வகை மீன்கள் லைட் வெளிச்சத்தை பார்த்தவுடன் மொத்தமாக கடல் நீர்மட்டத்திற்கு மேலே வரும். அப்போது வலையை விரித்து மொத்தமாக பிடிக்கும் போது அதிக லாபம் கிடைப்பதால் சில மீனவர்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனர். நேற்று முன்தினம் தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர் மற்றும் கடல் அமலாக்க பிரிவு போலீசார் தேவிபட்டினம் முதல் ஆற்றங்கரை வரை உள்ள கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவிபட்டினம் கடலில் ஒரு நாட்டுப் படகில் லைட் வெளிச்சத்தில் மீன்பிடித்த போது படகிலிருந்து 5 லைட்கள் மற்றும் ஜெனரேட்டர்களை பறிமுதல் செய்தனர். இனிவரும் நாட்களில் இதே போல் மீன் பிடித்தால் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதோடு மீனவர்கள் கைது செய்யப் படுவார்கள் என்று எச்சரித்தனர்.