தேவிபட்டினம் அத்தியூத்து பகுதியில் பனை மரங்களில் பரவிய காட்டுத்தீ
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகுதியில் பரவிய காட்டுத் தீயில் 300க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்தன. மாவட்டத்தில் தேவிபட்டினம், அத்தியூத்து, சித்தார் கோட்டை, பனைக்குளம், சாயல்குடி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலவும் வறட்சியால் தொடர்ச்சியாக உள்ள பனை மரங்களில் ஓலைகள் எளிதில் தீப்பற்றும் நிலையில் உள்ளது. தேவிபட்டினம் அருகே அத்தியூத்து முனியசாமி கோயில் பகுதியில் நேற்று முன்தினம் மாலை தொடர்ச்சியாக இருந்த பனை மரங்களில் மர்ம நபர்கள் வைத்துச் சென்றதால் தீ பரவியது. ஆடி காற்றின் வேகம் காரணமாக அடுத்தடுத்த பனை மரங்களுக்கு தீப் பற்றியதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர். ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் தொடர்ச்சியாக இருந்த 300க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் எரிந்தன. ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதியில் ஆடி மாதத்தில் தீப்பற்றுவது வாடிக்கையாக நிகழ்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.