பெண் கொலை வழக்கில் கணவர் உட்பட 4 பேரிடம் விசாரணை
சாயல்குடி; சாயல்குடி அருகே பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் உட்பட நான்கு பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய கோபால் 40. இவரும் துாத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்த ஜெர்மினும் 36, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர் . இவர்களுக்கு 12 வயதில் மகளும், 9 வயதில் மகன் உள்ளனர். விஜய கோபால் உத்தரகாண்ட் எல்லை பாதுகாப்பு துணை ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 5 ஆண்டுகளாக தனியாக பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் ஜூலை 17 இரவு 10:30 மணிக்கு வெட்டுக்காட்டில் வீட்டில் குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெர்மினை முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். மகள் கொலையில் கணவர் விஜயகோபாலுக்கு தொடர்பு இருப்பதாக அவரது பெற்றோர் ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து உத்தரகாண்டில் இருந்து விஜய கோபாலை சாயல்குடிக்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்ததாகவும் ஜெர்மின் பெயரில் வீடு கட்டியதால் அவர் வீட்டை எடுத்துக் கொண்டதோடு மாதந்தோறும் ரூ.17 ஆயிரம் ஜீவனாம்சம் கேட்டு முதுகுளத்துார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக கணவர் விஜய கோபால் தெரிவித்தார். இக்கொலை சம்பவம் தொடர்பாக கணவர் உள்ளிட்ட நான்கு பேரிடம் சாயல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.