இரவு நேரங்களில் ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்: பயணிகள் பாதிப்பு
ஆர்.எஸ்.மங்கலம்: இரவு நேரத்தில், ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிகளை இறக்கி செல்லும் அரசு பஸ் கண்டக்டர்களால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, கைகாட்டி விலக்கில் இருந்து 1.5 கி.மீ.,ல் ஆர்.எஸ்.மங்கலம் பஸ்ஸ்டாண்ட் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் இரவு 11:00 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று பஸ்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஸ் ஸ்டாப்புகளில் நின்று செல்லும் வகையில் இயக்கப்படும் இந்த பஸ்கள் இரவு நேரங்களில் பயணிகள் இருந்தும் ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் இறக்கி விடுவதாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புகார் எழுந்துள்ளது.நேற்று முன் தினம் இரவில் திருச்சியில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு பயணம் செய்த ஐந்திற்கும் மேற்பட்ட பயணிகளை அதிகாலை 3:30 மணிக்கு ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டிற்கு இரவு நேரத்தில் பஸ் செல்லாது எனக் கூறிய கண்டக்டர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டாயப்படுத்தி இறக்கியுள்ளார்.இதனால் இரவில் பெண் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இரவு நேரத்தில் கண்டக்டர்களால் ஏற்படும் இது போன்ற பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.