பாம்பனில் கனமழை பயணிகள் சிரமம்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பனில் பெய்த கன மழையால் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டனர்.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் பெய்கிறது. இந்நிலையில் நேற்று காலை பாம்பனில் திடீரென பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை பாலம் ஓரத்தில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாலத்தில் சுற்றுலா வாகனங்கள், அரசு பஸ்கள், சரக்கு லாரிகள் ஊர்ந்தபடி சென்றன.மேலும் பாலத்தில் நின்றபடி புதிய ரயில் பாலம், மன்னார் வளைகுடா கடலில் உள்ள தீவுகளை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் கடந்து சென்றனர். தொடர்ந்து பெய்த மழையால் பாம்பன் பகுதி மக்களின் இயல்பு நிலை பாதித்தது.