ஹைட்ரோ கார்பன் பணிகள் நிறுத்தம்
தேவிபட்டினம்:ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்ட பணிகள் விவசாயிகள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டன. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சில வாரங்களுக்கு முன்பு ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளை ஓ.என்.ஜி.சி., துவக்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் சோதனை கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி வழங்கியது. விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. இருப்பினும் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே மாதவனுார் பகுதியில் திட்டத்திற்கு இயந்திரங்கள் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி சில வாரங்களாக நடந்தது. அப்பகுதி விவசாயிகள் இயந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பு தொடர்ந்ததால் நேற்று திட்டப்பணிகள் நடைபெற்ற பகுதியில் இருந்து ராட்சத இயந்திரங்கள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டன. பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.