பரமக்குடியில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு கால்நடைகளுக்கு சிக்கல்
பரமக்குடி: பரமக்குடியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் கால்நடைகள் உணவுப் பொருட்களோடு உண்பதால் ஆபத்தான சூழல் உள்ளது.பரமக்குடி நகராட்சியில் துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி குடிநீர் டம்ளர்கள், உணவுப் பொருட்களை கட்டி கொடுக்க பயன்படுத்தப்படும் பேப்பர்கள் என பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை உள்ளது.ஆனால் சிறிய ஹோட்டல்கள் துவங்கி, மளிகை கடை உள்ளிட்ட அனைத்து மருந்து கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. மக்களும் பொருட்களைக் கொண்டு செல்ல துணிப்பைகளை கொண்டு செல்ல ஆர்வம் இன்றி இருக்கின்றனர்.ஒவ்வொரு சிறிய பொருளுக்கும் பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகளிடம் கேட்டு பெறுவதால் சிக்கல் உண்டாகிறது. தொடர்ந்து தினந்தோறும் சாப்பிட்ட உணவுப் பொருட்களை பைகளில் கட்டி துாக்கி எறிகின்றனர்.இவை மணல் வெளிகளில் பரவி நீர் நிலைகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. மேலும் தெருவில் திரியும் கால்நடைகள் பிளாஸ்டிக் பைகளுடன் உணவுகளை உண்பதால் அவற்றின் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படுகிறது.ஆகவே உணவுத்துறை அதிகாரிகள், நகராட்சி, வருவாய்த் துறையினர் அனைத்து வகையான மகால்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.