கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் ; வசந்த விழாவில் கோலாகலம்
பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழாவில் கருட வாகனத்தில் பெருமாள் வைகையில் வலம் வந்தார். எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழா ஜூன் 10ல் துவங்கி நடக்கிறது. ஜூன் 11 காலை 5:40 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகையில் எழுந்தருளினார். பின்னர் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி வலம் வந்த நிலையில் சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சியளித்தார். நேற்று முன்தினம் இரவு வைகையில் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் கோலாகலமாக உலா வந்தார். நேற்று இரவு அனுமன் வாகனத்தில் எழுந்தருளிய நிலையில், தினமும் இரவு அவதார சேவையில் அருள் பாலிக்கிறார். இன்று (ஜூன் 15) மீண்டும் இரவு கள்ளழகர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் நகர் வலம் வந்து நாளை காலை கோயிலை அடைகிறார்.