மாயமான சரக்கு கப்பலுக்கு மீண்டும் கிடைத்தது சிக்னல்
ராமேஸ்வரம்: வங்கக்கடலில் சூறாவளியால் மாயமான ஆந்திர மாநில சரக்கு கப்பலில், தகவல் தொடர்பு கிடைத்த நிலையில், இன்று கப்பல் பாம்பன் கரைக்கு வர உள்ளது.ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து கேப்டன் உள்ளிட்ட 12 மாலுமிகளுடன், ஏப்., 20ல் கேரள மாநிலம், கொச்சி செல்ல புறப்பட்ட சரக்கு கப்பல், ஏப்., 24ல் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து செல்ல இருந்தது.ஏப்., 22ல் புதுச்சேரி வந்த இக்கப்பல், அங்கிருந்து புறப்பட்டு வங்கக் கடலில் பயணித்த போது, திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், கப்பல் எங்கு சென்றது; அதிலிருந்த 12 பேரின் கதி என்னவென்று தெரியாமல் கப்பல் உரிமையாளர், மாலுமி உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்நிலையில், மூன்று நாட்களுக்கு பின், நேற்று காலை கப்பலில் இருந்து தகவல் தொடர்பு சிக்னல் கிடைத்தது. 'வங்கக்கடலில் ஏற்பட்ட திடீர் சூறாவளியால் கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதால் வர தாமதமானது. ஏப்., 27 காலை பாம்பன் கடற்கரைக்கு வந்து விடுவோம்' என, கப்பல் கேப்டன் தெரிவித்துள்ளார்.