உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பனைமரக்காடுகளுக்கு தீ வைக்கும் மர்ம கும்பல் விழிப்புணர்வு தேவை

பனைமரக்காடுகளுக்கு தீ வைக்கும் மர்ம கும்பல் விழிப்புணர்வு தேவை

திருப்புல்லாணி: பனை மரத்தின் அனைத்து பாகங்களும் பயன் தரும் வகையில் உள்ளன. பூலோகத்தின் கற்பகத்தருவாக விளங்கும் பனை மரத்தை நம்பி ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றனர்.பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு, பனம்பழம், கிழங்கு, பதநீர், கருப்பட்டி மற்றும் கலைநய பொருள்களை செய்வதற்கு ஓலைகள் பயன்படுகிறது. திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேதுக்கரை, தினைக்குளம், களிமண்குண்டு, பெரியபட்டினம், முத்துப்பேட்டை, ரெகுநாதபுரம், உத்தரவை உள்ளிட்ட பகுதிகளில் பனை மரங்கள் மிகுதியாக உள்ளன.இப்பகுதிகளில் மிகுதியான அளவு தென்னந்தோப்புகளும், பனை மரங்களும் உள்ள நிலையில் பனைமரக்காடுகளை மர்ம நபர்கள் தீ வைத்து அழிக்கும் போக்கு தொடர்கிறது. பனைத் தொழிலாளர்கள் கூறியதாவது:பனை மரத்தை ரூ.200 முதல் 400 வரை விலைக்கு வாங்கி அவற்றை பல துண்டுகளாக வெட்டி விறகிற்காக செங்கல் சூளைகளுக்கு அனுப்புகின்றனர். இதனால் பனை மரத்தை நம்பி உள்ள தொழிலாளர்கள் நாளடைவில் உற்பத்தி பொருள்கள் கிடைக்காமல் தொழில் நலிவடைகின்றனர்.பனை மரம் வெட்டுவதற்கு முறையாக வருவாய்த் துறை மற்றும் அனுமதி பெற வேண்டும். இதனை தவிர்ப்பதற்காக கூட்டமாக உள்ள பனைமரக்காடுகளில் தீ வைத்து வேர் பகுதிகளை எரிப்பதால் நாளடைவில் பட்டுப் போன மரங்களைத்தான் அழிக்கிறோம் என கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பனை மரத்தை காப்பாற்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை