| ADDED : பிப் 01, 2024 07:06 AM
பரமக்குடி :-பரமக்குடி பகுதியில் 14 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கிலோ நெல் ரூ.23.10க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.பரமக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. இங்கு கடந்த சில நாட்களாக அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து அரசு நெல் பெறும் நோக்கில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. இங்கு விவசாயிகள் ஆதார் கார்டு, அடங்கல், வங்கி கணக்கு எண் நகல் காண்பித்து நெல்லை கொடுத்து தகுந்த விலை பெற முடியும். அரியனேந்தல், வெங்கிட்டான்குறிச்சி, பாம்பூர், விளத்துார், புதுப்பட்டி, ஊரக்குடி, பெருங்கரை, தேவனேரி, பார்த்திபனுார், கள்ளிக்குடி, பி.புத்துார், புதுக்குடி, தடுதலான்கோட்டை, புலவர் வேலாங்குடி ஆகிய 14 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அரியனேந்தல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் விஷ்ணுசந்திரன் பார்வையிட்டார். இங்கு சன்னரக 'ஏ' கிரேடு நெல் கிலோ ரூ.23.10, பொது ரகங்கள் கிலோ ரூ.22.65 என விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.