பனை மரங்களில் காய்ப்பு குறைவு பதநீர் லிட்டர் ரூ.100க்கு விற்பனை
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழையின்றி பனைமரங்களில் காய்ப்பு பாதிக்கப்பட்டுஉள்ளதால் பதநீர் உற்பத்தி குறைந்து கடந்தமாதம் லிட்டர் ரூ.80க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.100க்கு விற்கப்படுகிறது.ராமநாதபுரம்மாவட்டத்தில் கிராமங்களில் ஏராளமான பனைமரங்கள் உள்ளன. அவற்றின் ஓலை, குருத்தை பயன்படுத்தி பெட்டிகள், பாய்கள் மற்றும் பதநீரில் பனங்கருப்பட்டி தயாரிக்கின்றனர். பதநீர், நுங்கு விற்பனை செய்கின்றனர். ஏப்., முதல் ஜூலை வரை நுங்கு, பதநீர் சீசன். இந்நிலையில் ரியல் எஸ்டேட், செங்கல் சூளை பயன்பாட்டிற்காக பனைமரங்கள் அழிக்கப்படுவதால் அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் போதிய மழையின்மையால் பனை மரங்களில் காய்ப்பு குறைந்துள்ளது.தற்போது கோடை காலம் என்பதால் தேவை அதிகரிப்பால் கடந்த மாதம் லிட்டர் ரூ.80 க்கு விற்ற பதநீர் ரூ.100க்கு விற்கப்படுகிறது. நுங்கு கண் ரூ.7க்கு விற்கப்படுகிறது. பொதுவாக சுத்தமான பதநீர் ஒரே நாளில் கெட்டுவிடும். சிலர் செயற்கை இனிப்பு கலந்து தரமற்ற பதநீரை விற்கின்றனர். இதுபோன்ற நபர்களை கண்டறிந்து உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பனைத்தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.