பரமக்குடி நகராட்சி வணிக வளாக கடைகள் சேதம்
புதுப்பிக்க கோரிக்கைபரமக்குடி: பரமக்குடியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நகராட்சி வணிக வளாக கடைகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. பரமக்குடி உழவர் சந்தை, சிறுவர் பூங்கா, மீன் மார்க்கெட் உள்ள பகுதியில் நகராட்சி வணிக வளாகம் இயங்குகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட கடைகள் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இறைச்சி கடைகள், மளிகை, மெக்கானிக் ஷாப் என செயல்படுகிறது. இந்நிலையில் கடைகளின் மேல் பூச்சு மற்றும் சுவர் ஒட்டுமொத்தமாக இடிந்து அவ்வப்போது ஆபத்தை உண்டாக்கி வருகிறது. இதனால் பல கடைகள் செயல்படாமல் பூட்டியே இருக்கின்றன. மேலும் செயல்படும் கடைகளும் சீரமைக்கப்படாத நிலையில் மக்கள் ஆபத்தான நிலையில் பொருட்களை வாங்கிச் செல்லும் நிலை உள்ளது. இப்பகுதியில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் பொருட்களை பாதுகாக்க முடியாமல் தவிக்கின்றனர். தொடர்ந்து மழை பெய்யும் சூழலில் வளாகத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே ஒட்டுமொத்தமாக வணிக வளாகத்தை இடித்து புதுப்பித்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.