பள்ளி நேரத்தில் பஸ் இயக்க கோரி பெற்றோர்கள், மாணவர்கள் தர்ணா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கலையனுார் கிராமத்திற்கு பள்ளி துவங்கும், முடியும் நேரங்களில் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர்கள், மாணவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட இளைஞர் அணி பாஸ்கர் முன்னிலையில் கலையனுார் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து கலையனுாருக்கு பள்ளி துவங்கும், முடியும் நேரத்தில் அரசு பஸ்களை இயக்க வலியுறுத்தினர். மக்கள் கூறியதாவது: கலையனுார், வெண்குளம், பெருவயல், பூதோண்டி, நரியனேந்தல் ஆகிய ஊர்களை சேர்ந்த மாணவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். இந்நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து எங்கள் ஊர்களுக்கு இரவு 7:00 மணிக்கு தான் பஸ் இயக்குகின்றனர். காலை நேரத்திலும் பஸ் வருவது இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே காலை 8:00 மாலை 5:00 மணிக்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும் எனக்கூறினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்திக்க வைத்தனர். விசாரித்து பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார்.