ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிமென்ட் சீட்டில் கூரை நோயாளிகள் அவதி
தொண்டி: தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிமென்ட் சீட்டில் கூரை அமைத்துள்ளதால் வெப்பம் தாங்க முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.தொண்டியில் மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும் 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 20 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு இ.சி.ஜி., மருந்தகம், நோயாளிகள் தங்கியுள்ள அறைகளுக்கு மேல் சிமென்ட் சீட் கூரை உள்ளது. இதனால் வெப்பம் தாங்க முடியாமல் டாக்டர்கள் மற்றும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இது குறித்து தொண்டி மாலிக் கூறியதாவது:தொண்டியில் அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே அனல் காற்றுடன் வெயில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிமென்ட் சீட்டில் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பத்தை தாங்க முடியாமல் டாக்டர்கள், செவிலியர்கள், நோயாளிகள் கடும் அவதிப்படுகிறார்கள். வெப்பம் தாக்காத வகையில் கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.