கிராமத்திற்குள் புகுந்த கடல் நீர்: அச்சத்தில் மக்கள்
தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுக்குடியில் கடல் நீர் மட்டம் உயர்ந்து கிராமத்திற்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். புதுக்குடி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கிராமம். நேற்று காலையில் திடீரென கடல் நீர் மட்டம் உயர்ந்து கிராமத்திற்குள் புகுந்தது. இதுகுறித்து கிராமத்தினர் கூறியதாவது: தொண்டி கடலில் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சில நாட்களாக கடல் நீர் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதுமாக வழக்கமாக உள்ளது. நேற்று காலை 6:00 மணிக்கு கடல் நீர் மட்டம் உயர்ந்து கிராமத்திற்குள் புகுந்தது. கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகளை கடல் நீர் சூழ்ந்தது. பதட்டமடைந்த மீனவர்கள் படகுகளை கரையேற்றினர். கடலை ஓட்டியுள்ள ஆற்றில் நீர் அதிகமானதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆண்டுதோறும் இம்மாதத்தில் கடல் நீர் மட்டம் வழக்கமாக உயரும். இதற்கு வாங்கல் வெள்ளம் என்ற பெயர் உண்டு. கடல் பெருக்கு ஏற்படும் போது இது போன்ற மாற்றங்கள் நடக்கும். நேற்று 100 அடி வரை கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்தது. சில மணி நேரங்களில் வடிய துவங்கியது என்றனர்.