| ADDED : ஜன 14, 2024 04:09 AM
திருவாடானை : பொங்கல் தொகுப்பு வழங்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று ரேஷன் கார்டுதாரர்கள் எதிர்பார்க்கின்றனர். பொங்கலை முன்னிட்டு அரிசி கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்பு அரசு வழங்குகிறது. இன்று (ஜன.14) வரை பொங்கல் தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது.திருவாடானை தாலுகாவில் 39,400 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் அரிசி வாங்கும் கார்டுதார்கள் 36,616 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று டோக்கன் வழங்கினர். இதையடுத்து கடந்த சில நாட்களாக பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் தொகுப்பை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் நடக்க முடியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாமல் உள்ளனர். அவர்களை சார்ந்தவர்கள் சென்று வாங்கிக் கொள்ள அதற்கான விண்ணப்பத்தில் குடும்பதலைவர் கையெழுத்துடன் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு தொகுப்பு கொடுக்க மறுக்கப்படுகிறது. மேலும் பொங்கல் தொகுப்பு வாங்க சில ரேஷன் கார்டுதாரர்களின் கைரேகை பதிவாகவில்லை. இதனால் அவர்களுக்கு பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. தாலுகாவில் ஏராளமான மக்கள் வேலை வாய்ப்புக்காக சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கி வேலை செய்கின்றனர். அவர்களது ரேஷன்கார்டு சொந்த ஊரில் உள்ளது. அவர்கள் இன்றுக்குள் சென்று பொங்கல் தொகுப்பை பெற முடியாத நிலையில் உள்ளனர். எனவே பல்வேறு சிரமங்கள் உள்ளதால் இம்மாதம் முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும், என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.