கீழக்கரையில் மின்கம்பங்களில் தனியார் விளம்பர பதாகைகள் மின் ஊழியர்கள் அவதி
கீழக்கரை: கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள மின்கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் விளம்பரப்பதாகை பொருத்தப்பட்டுள்ளன. இதனால் மின் ஊழியர்கள் பழுதுநீக்க ஏறி, இறங்குவதற்கு சிரமப்படுகின்றனர்.கீழக்கரையில் போக்குவரத்து மிகுந்த சீதக்காதி சாலையில் சில தனியார் தங்களது விளம்பரப் பதாகைகளை பொதுமக்கள் பார்வையில் தெரிவதற்காக மின்கம்பங்களின் நடுப்பகுதியில் இரும்பு கம்பியால் கட்டி வைத்துள்ளனர். மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: வள்ளல் சீதக்காதி சாலை முதல் கடற்கரை செல்லக்கூடிய சாலை வரை உள்ள பிரதான சாலைகளில் மின்கம்பங்களில் எவ்வித அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை இரும்பு கம்பியால் பொருத்தியுள்ளனர்.கடைகள், வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் மின்பழுது ஏற்பட்டால் அவற்றை சரி செய்வதற்காக கம்பங்களில் ஏறுவது வரும் பெரும் அவதியாகவும் இயலாத காரியமாகவும் உள்ளது என்றார். பெருவாரியான மின் கம்பங்களில் விளம்பரங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகம், போலீசார், மின் வாரியத்தினர் ஒருங்கிணைந்து இடையூறு ஏற்படுத்துவோர் மீது அபராதம் விதித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.