ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஓரங்கட்டப்பட்ட பேட்டரி கார் தனியார் வாகனத்தில் கட்டணம் வசூல்
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பேட்டரி கார் வழங்கப்பட்டது. தற்போது அது ஓரங்கட்டப்பட்ட நிலையில் தனியார் பேட்டரி காரில் பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்து இயக்கப்படுகிறது.ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை, செகந்திராபாத், திருப்பதி, கன்னியாகுமரி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் செல்கின்றனர்.இதில் முதியவர்கள், குழந்தைகள் நடக்க முடியாதவர்களுக்காக ரயில்வே நடைமேடைகளில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு பேட்டரி கார் ஒன்று வழங்கப்பட்டது. இதனை பயணிகள் இலவசமாக பயன்படுத்தி வந்தனர்.இந்த பேட்டரி காரை முறையாக பராமரிப்பு செய்யாததால் பழுது ஏற்பட்டு அதனை ஓரங்கட்டி ரயில்வே நிர்வாகத்தினர் நிறுத்தி விட்டனர். தற்போது ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் தனியார் ஒருவர் பேட்டரி கார் இயக்கி வருகிறார். இவர் நபருக்கு ரூ.10 வீதம் கட்டணம் வசூலிக்கிறார்.இலவச வாகனத்தை பயன்படுத்தாமல் கட்டண வாகனத்தை பயன்படுத்துவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.