உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பூட்டிக்கிடக்குது புது அங்கன்வாடி மையம்  கண்டு கொள்ளாத ராமநாதபுரம் எம்.எல்.ஏ., 

பூட்டிக்கிடக்குது புது அங்கன்வாடி மையம்  கண்டு கொள்ளாத ராமநாதபுரம் எம்.எல்.ஏ., 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி 23வது வார்டில் சட்டசபை தொகுதி வளர்ச்சி நிதி ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம் பணிகள் முடிந்தும்பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிக் கிடக்கிறது. நிதி அளித்தால் போதுமா. அதனை செயல்படுத்த வேண்டாமா என எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா மீது மக்கள் குற்றம் சாட்டினர்.மாவட்ட தலைநகரமான ராமநாதபுரத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகும் நிலையில் இதுவரை குடிநீர், பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா முதுகுளத்துாரில் உள்ளதால் ராமநாதபுரத்திற்கு அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே அவ்வப்போது வந்து தலைகாட்டுகிறார்.அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் நடக்கும் பணிகளை கூட அவர் கண்டுகொள்வது இல்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதற்குச் சான்றாக ராமநாதபுரம் நகராட்சி 23வது வார்டு வனசங்கரிஅம்மன் கோவில் தெருவில் 2023-24 தொகுதி வளர்ச்சி நிதி ரூ.15 லட்சத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.அங்கு எம்.எல்.ஏ., பெயரில் கல்வெட்டு, முகப்புகளில் எழுதி விளம்பரப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு பல மாதங்களாக அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளது. குழந்தைகளின் நலன்கருதி விரைவில் அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் கூறுகையில், அங்கன்வாடி மையத்தில் பாத்ரூம் வேலை பாக்கியுள்ளது. அதனை முடித்து விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை