| ADDED : ஆக 05, 2011 12:09 AM
மண்டபம்:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 56 ஆயிரம் ரூபாய்க்காக
அ.தி.மு.க., பிரமுகர் சாத்மீக சீலன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது
செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.மண்டபம் யூனியன்
பிரப்பன்வலசையில் வசித்து வந்தவர் சாத்மிக சீலன்(38). அ.தி.மு.க.,வின்
முன்னாள் மாவட்ட பிரதிநிதியாக இருந்த இவருக்கு ரெகுநாதபுரத்தில் பெட்ரோல்
பங்க் உள்ளது. கடந்த 2ம் தேதி பங்கை மூடிவிட்டு வசூல் தொகை 56 ஆயிரத்து 420
ரூபாயுடன் டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரான் என்ற பகுதி
அருகே ஆம்னி வேன் மோதியதில் நிலை தடுமாறி விழுந்தார். வேனில் இருந்தவர்,
பணத்தை பறித்து சாத்மிக சீலனை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர்
தப்பி ஓடிவிட்டனர். உச்சிப்புளி போலீசார் விசாரணை நடத்தி, புதுமடம்
சிவக்குமார்(22), சூரங்காட்டுவலசை ராமலிங்கம்(27) ஆகியோரை கைது செய்தனைர்.
தலைமறைவான தேவிப்பட்டிணம் பாலமுருகனை தேடி வருகின்றனர்.இதுகுறித்து
போலீசார் கூறியதாவது: சாத்மிக சீலன் பணம் கொண்டு வருவதை அறிந்த இவர்கள்
திட்டமிட்டு செயல்பட்டனர். பணத்தை பிடுங்கிய பின் உயிரோடு விட்டால் தங்களை
போலீசில் காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற பயத்தில் அவரை கொலை செய்தனர்,
என்றனர்.