| ADDED : ஆக 05, 2011 10:12 PM
பரமக்குடி:பரமக்குடி அடுத்த எமனேஸ்வரம் ஜீவா நகரில் இயங்கி வரும் ரேசன் கடை
2000கார்டுகளுடன், போதிய இடவசதியின்றி வெயிலில் நின்று பொருட்கள் வாங்க
வேண்டியுள்ளதால் மக்கள் வேதனையுடன் உள்ளனர். எமனேஸ்வரம் ஜீவா நகரில் உள்ள
ரேஷன் கடை கிறிஸ்தவ தெரு, பெருந்தேவி நகர், தெய்வேந்திர நகர், மலையான்
குடியிருப்பு, கமலா நேரு நகர், ஜீவாநகர், பர்மா காலனி, வி.பி.காலனி
உள்ளிட்ட சில பகுதிகள் உள்ளிட்ட கார்டுதாரர்களுக்காக செயல்படுகிறது.
கண்மாய் கரையை ஒட்டி போதிய இடவசதியின்றி வீட்டில் இயங்கி வருகிறது. அரிசி
மற்றும் சர்க்கரை வழங்கும் போது அதிக கார்டு தாரர்கள் வருவதால்
கூலியாட்கள், நெசவாளர்கள் உட்பட பலர் அரை நாள் வேலையை இழக்க வேண்டி
இருக்கிறது. கடை முன் ஷெட் எதுவும் இல்லாததால் கார்டுதார்கள் வெயிலில்
வாடுகின்றனர். ஒவ்வொரு ரேஷன் கடையிலும் குறைந்த பட்சம் 800 முதல் 1000
கார்டுகள் இணைக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. இங்கு மட்டும் 2,000
கார்டுதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பகுதியாக குறிப்பிட்ட
தேதியில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. எந்த தேதியில் வழங்கப்படுகிறது என
அறிய ஒரு முறை அலைய வேண்டி உள்ளது. இதனால் நேர விரையம் ஏற்படுகிறது. எனவே
கார்டுதாரர்களில் பாதி பேரை, அருகில் உள்ள கடையில் இணைக்க வேண்டும். அல்லது
புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும். மேலும், ஜீவா நகர் ரேஷன் கடை முன் ஷெட்
வசதி ஏற்படுத்த வேண்டும்.