ராமேஸ்வரம் - திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் பரமக்குடியில் நிறுத்தம் தினமலர் செய்தி எதிரொலி
பரமக்குடி: ராமேஸ்வரத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் பரமக்குடியில் நின்று செல்லும் நிலையில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மீட்டர் கேஜ் பாதை இருந்த போது பாலக்காடு - ராமேஸ்வரம் இடையே பயணிகள் ரயில் சென்றது. பின்னர் அகல ரயில் பாதையாக மாறிய நிலையில் பாலக்காடு ரயிலுக்கு மாற்றாக திருவனந்தபுரம் டூ மதுரை இடையே அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. மேலும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து ரயில்களும் ராமேஸ்வரம் வரை செல்ல வேண்டும் என்றும், பரமக்குடியில் நிறுத்தம் வேண்டும் என்றும் தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டி வந்தது. இந்நிலையில் அக்.,15ல் ராமேஸ்வரம் வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் 17ம் தேதி முதல் ராமேஸ்வரம் வரை நீட்டித்து அறிவிப்பு செய்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் பரமக்குடி வந்த ரயிலை நகராட்சி தலைவர் சேது கருணாநிதி மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர். இதன் மூலம் ராமேஸ்வரம், பழநி, பொள்ளாச்சி என ஆன்மிக தலங் களுக்கு செல்ல முடியும். தொடர்ந்து மங்களூரு -ராமேஸ்வரம் ரயிலுக்கும் பரமக்குடியில் நிறுத்தம் வேண்டும். இதே போல் பாலக்காடு - ராமேஸ்வரம் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும். மேலும் அனைத்து ரயிலுக்கும் பரமக்குடியில் நிறுத்தம் வேண்டும் என ரயில்வே துறைக்கு பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.