இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் குதிரைகள் பறிமுதல் ரூ.50 லட்சம் மதிப்புள்ளவை
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கடல் குதிரைகள், கடல் அட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் இருந்து கடல் குதிரைகள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் 4 பேர் கொண்ட குழுவினர் கண்காணித்து வந்தனர். பாரதிநகரில் உள்ள ஒரு உணவகத்தில் சந்தேகப்படும் வகையில் நின்ற கார் ஒன்றை ஆய்வு செய்தனர். அதில் அரிய கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள், கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. ரூ.50 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கடல் குதிரைகள், 20 கிலோ கடல் அட்டைகளை காரிலிருந்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த கீழக்கரையைச் சேர்ந்த ஹசன் இப்ராஹிம் என்பவரை கைது செய்து மதுரை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.